அமைச்சர் பதவி வழங்காதது வருத்தமா? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி அளிக்காதது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக 124 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் திமுக வேட்பாளர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக தங்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் அங்கிருந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம், பெரியார் திடல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “மிகவும் மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவையான ஒரு விஷயம் நடந்துள்ளது. நிச்சயமாக எங்களுடைய தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கழக தோழர்கள் மக்களுக்காக பணியாற்றுவார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அமைச்சர் பதவி வழங்காதது ஏதேனும் வருத்தமாக உள்ளதா? என்ற கேள்விக்கு, உங்களுக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதா? எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.