’’அவன் நல்லவனா… அப்போ நான்?’’ அண்ணனின் ஆத்திரத்தால் குடல்சரிந்து ரத்தவெள்ளத்தில் தம்பி சடலம்!

 

’’அவன் நல்லவனா… அப்போ நான்?’’  அண்ணனின் ஆத்திரத்தால் குடல்சரிந்து ரத்தவெள்ளத்தில் தம்பி சடலம்!

குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தைப்பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோட்டூர் மக்கள்.  அண்ணனே தம்பியை கத்தியால் குத்தி கொலைசெய்யும் அளவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான காரணமும் ஏதும் இல்லை. ஒரு சின்ன விசயத்திற்காக இப்படியா கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் வரவேண்டும் என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் சன்னதி தெருவில் வசித்த வந்தவர் சிவகுமார். திருமணானவர்.  இவரது தம்பி முருகவேல்.  28வயதான இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.

பக்கத்து ஊரான சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் சிவகுமாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதுதொடர்பாக கோட்டூர் யூனியன் அலுவலகம் அருகில் சண்முகத்திற்கும் சிவகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆவேசமாக சண்முகத்தின் சட்டையைப்பிடித்துள்ளார் சிவகுமார்.  இதைப்பார்த்ததும் ஓடிவந்த முருகவேல், ‘’ஏன் இப்டிச்செய்யுற? அவரு நல்ல மனுஷன். அவருகிட்ட போய் ஏன் இப்டி நடந்துக்கிற?’’என்று கேட்டு, சண்முகத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

அடுத்த மனுசனுக்கு ஆதரவாக பேசிய தம்பி, தன்னை  ஆதரவாக பேசவில்லையே என்ற ஆத்திரத்திலேயே வீட்டுக்கு வந்திருக்கிறார் சிவகுமார்.

’’அவன் நல்லவனா… அப்போ நான்?’’ என்று கேட்டு, இரவில் இதுகுறித்து தம்பியிடம் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார்.

அப்போது, கொஞ்சமும் எதிர்பாராத வகையில், கத்தியை எடுத்து சரமாரியாக தம்பியின் வயிற்றில் குத்தியிருக்கிறார்.  இதில், குடல்சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த முருகவேலை, வண்டியில் அள்ளிபோட்டுக்கொண்டு மருத்துவனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

முருகவேல் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும், தப்பியோடி தலைமறைவாகிவிட பார்த்த சிவக்குமாரை கோட்டூர் போலீசார் கைது செய்துவிட்டனர்.

முருகவேலுவின் உடல் பிரேத பரிசோதனைக்கான மன்னார்குடி அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணனே தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.