’ஐபேக்’ ஆட்டம் – திமுகவில் பூகம்பம்

 

’ஐபேக்’ ஆட்டம் – திமுகவில் பூகம்பம்

திமுகவை ஆட்டுவிக்கும் ’ஐபேக்’ நிறுவனத்தால் அந்தக் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய திமுக எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வரும் தேர்தலில் மீண்டும் சீட் தரக் கூடாது என ஐபேக் பரிந்துரை செய்திருப்பதே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் செலவிலான இந்த ஒப்பந்தத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது. மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உள்ளிட்ட ஒருசிலர் கட்சி மட்டத்தில் எதிர்ப்பை வெளிப்படையாகவே பதிவும் செய்தனர்.

’ஐபேக்’ ஆட்டம் – திமுகவில் பூகம்பம்

ஆனாலும் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஏற்பாட்டில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதால் முணுமுணுப்புகளுடன் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
சர்வே என்கிற பெயரில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் களமிறங்கிய ஐபேக் டீம், முதற்கட்ட அறிக்கையை ஸ்டாலினிடம் தந்தது. இதன் தொடர்ச்சியாகவே ‘கூட்டணி கட்சிகளுக்குக் குறைவான இடங்கள் தந்தால் போதும், திமுக 190க்கும் குறையாத இடங்களில் போட்டியிட வேண்டும், பெரும்பாலான கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்’ என்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்தன.

’ஐபேக்’ ஆட்டம் – திமுகவில் பூகம்பம்


இதற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. சீட்டுகள் குறைக்கப்படுவதற்கு காங்கிரசும் அதிருப்தி தெரிவித்தது. உடனே, ‘’ அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்கள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த சிலர் சதி செய்கிறார்கள்’’ என்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு பிரச்சனைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இந்த பிரச்சனை இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.
இரண்டாவது கட்டமாக, திமுக போட்டியிடும் தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக அந்தக் கட்சித் தலைமையிடம் ஐபேக் அடுத்தடுத்து பட்டியலை கொடுத்து வருகிறது. லேட்டஸ்டாக தற்போதைய திமுக எம்.எல்.ஏக்களில் யாருக்கு மீண்டும் சீட் தந்தால் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்கிற பட்டியலையும் தந்திருக்கிறது. இதில் தற்போதைய சிட்டிங் திமுக எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இல்லையாம்.

’ஐபேக்’ ஆட்டம் – திமுகவில் பூகம்பம்

வேளச்சேரி வாகை சந்திரசேகர், நத்தம் ஆண்டி அம்பலம், சங்கராபுரம் உதயசூரியன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தத் தகவல் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கும் தெரியவர கொந்தளிப்பு அதிகமாகியிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ, ‘’ 5 வருஷம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்து நாங்க படற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். கைக்காசை எல்லாம் கட்சி நிகழ்ச்சிகளுக்காக காலி பண்ணிட்டு இப்ப வெறுங்கையோட நிற்கிறோம். இந்த சூழ்நிலையில் கட்சித் தலைமை எங்களை கைதூக்கிவிடும்ணு பார்த்தால் யாரோ சொல்ற பேச்சைக் கேட்டிட்டு எங்க தலையில் கல்லைத் தூக்கிபோட அல்லவா பார்க்குது! ஒரு தொகுதிக்குள்ள ஏதாவது ஒன்றிரண்டு இடங்களில் ஒருசிலரிடம் சர்வே பண்ணினால் அது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கருத்தாக ஆகிவிடுமா? சீட் ஒதுக்கீட்டில் ஏடாகூடமா ஏதாவது நடந்தால் மீண்டும் திமுக எதிர்க் கட்சிதான். அதில் மாற்றமேயில்லை’’ என ஆவேசம் காட்டினார்.