”அக்டோபரில் சேவைத்துறை அபார வளர்ச்சி – 8 மாதங்களில் காணாத உயர்வு”!
நாட்டின் சேவைத்துறை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது, தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிக்கீ – ஐஎச்எஸ் மார்கெட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம், இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை துறையின் மதிப்பீடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த குறியீடுகளை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபரில் நாட்டின் சேவைத் துறை 8 மாதங்களில் இல்லாத அளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த பிப்ரவரிக்கு பிறகு முதன்முறையாக 50 புள்ளிகளுக்கு மேல் சேவைத்துறை பெற்றுள்ளதாக கூறி உள்ள அந்நிறுவனம் செப்டம்பரில் சேவைத்துறை குறியீடு 49.8 புள்ளிகளாக இருந்த நிலையில் அக்டோபரில் 54.1 புள்ளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத்துறை கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில், அது தற்போது படிப்படியாக மீண்டு சிறப்பான வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருகிறது. இதை பிரதிபலிக்கும் விதமாக இந்த சர்வே முடிவுகள் அமைந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க சேவைத்துறையின் உற்பத்தி செலவினங்களும் பிப்ரவரிக்கு பிறகு கடுமையாக உயர்ந்துவருவதும் தெரியவந்துள்ளது. எனினும் வர்த்தகத்தை மீட்டெடுக்க சேவைத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உற்பத்தி செலவினங்களை கட்டுப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி பயணப்படுவதும் தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சேவைத்துறை 60 சதவீதம் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ். முத்துக்குமார்