பாகிஸ்தானை காட்டிலும் சீனாதான் இந்தியாவின் நம்பர் 1 எதிரி… பிரதமர் மோடியை நம்பும் மக்கள்.. வாக்கெடுப்பு முடிவு..
ஐ.ஏ.என்.எஸ். சிவோட்டர் அண்மையில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் பல கேள்விகள் கேட்டு ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. அதில் பல ருசிகரமான முடிவுகள் கிடைத்தன. பாகிஸ்தானை காட்டிலும் சீனாதான் நமக்கு பெரிய எதிரி என பலர் அந்த வாக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.என்.எஸ். சிவோட்டர் ஸ்னாப் வாக்கெடுப்பு முடிவுகளின்படி, சீனாவை கையாள பிரதமர் நரேந்திர மோடி மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 89 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெரிய எதிரி யார் என்ற கேள்விக்கு இந்தியாவின் நம்பர் 1 பிரச்சினை சீனாதான் என 68.3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம் 31.7 சதவீதம் பேர் மட்டுமே நமக்கு பெரிய எதிரி பாகிஸ்தான் என கூறியுள்ளனர். இதுவரை பெரும்பாலான மக்கள் பாகிஸ்தான் எதிரி என்று கூறிவந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அரசை 73.6 சதவீத பேர் நம்புவதாக தெரிவித்தனர். ஆனால் எதிர்கட்சிகளை 16.7 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக தெரிவித்துள்ளனர். சீன பொருட்கள் புறக்கணிப்பு தொடர்பான கேள்விக்கு 68.2 சதவீத சாமானிய மக்கள் சீன பொருட்களை புறக்கணிப்போம் என தெரிவித்தனர். 31.8 சதவீதம் பேர் தொடர்ந்து சீன பொருட்களை வாங்கும் என தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தியை 61.3 சதவீதம் பேர் நம்பவில்லை. அதேவேளையில் 39 சதவீதம் பேர் அவரை நம்புகின்றனர்.
கல்வான் பள்ளத்தாக்கு நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரண நிகழ்வு மக்கள் மனதில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். சீனாவுக்கு இந்தியா இன்னும் சரியான பதிலடி கொடுக்கவில்லை என 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 39.8 சதவீதம் மத்திய அரசு சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக கருதுகின்றனர்.