“காலை வணக்கம்” சொல்வதில் இந்தியர்கள் முதலிடம்
இது கைபேசிகளின் காலம்…உலகம் முழுவதும் 600 கோடி பேரிடம் கைபேசிகள் இருக்கின்றன. இந்தியாவில் 86 கோடி பேரிடம் கைபேசிகள் இருக்கின்றன.தமிழகத்தில் நான்கில் ஒருவரிடம் கைபேசி இருக்கிறது.இவர்கள் தினமும் காலையில் “வாட்ஸ் அப்”கள் மூலம் ‘குட்மார்னிங்’ சொல்லிக் கொள்கிறார்கள். இரவில் “குட் நைட்” சொல்லிக் கொள்கிறார்கள்
பூக்கள், குழந்தைகள், பறவைகள், தத்துவங்கள், சூரிய உதயம் என்று பலவிதமான காலை மற்றும் இரவு வணக்கப் படங்களை இந்தியர்கள் ஒருவொருக்கொருவர் அனுப்பிக் கொள்கின்றனர். காலையில் வாட்ஸ் அப்பின் முதல் சொல் இந்த ‘குட்மார்னிங்’தான்..
இதில் விசேஷம்..? உலகிலேயே வாட்ஸ்-அப் மூலம் அதிகம் பேர் குட்மார்னிங் சொல்லிக் கொள்ளும் நாடு எது தெரியுமா? அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அல்ல. இந்தியாதான். இணையதளங்கள் முடங்கிப் போகும் அளவுக்கு இந்தியாவில் வசிப்போர் அன்றாடம் காலையில் கோடிக்கணக்கான “காலை வணக்கம்” படங்களை அனுப்புகிறார்கள். கைபேசி வைத்திருக்கும் இந்தியர்களில் 63 சதவீதம் பேர் தினமும் காலையில் ‘காலை வணக்கம்’ சொல்லிக் கொள்கிறார்கள்.
இந்தியர்களின் கைபேசிகள் அடிக்கடி முடங்கிப் போவதன் பின்னணி என்ன? என கூகுள் ஆய்வாளர்கள் விரிவான ஆராய்ச்சியில் இறங்கிய போது. இந்தியாவில் கைபேசி பயன்படுத்தும் மூவரில் ஒருவரது கைபேசியில் சேமிப்புப் பற்றாக்குறை ஏற்படுவது தெரிய வந்தது…இதற்கு காரணம், அவர்கள் அன்றாடம் அனுப்பும் “காலை வணக்கம்” படங்கள் என்பதும் தெரியவந்தது. இதுமட்டுமல்ல,இந்தியாவில் கூகுள் வழி “காலை வணக்கம்” படங்களும் அதிகம் தேடப்படுவதாக கூகுள் நிறுவனம் சொல்கிறது.
ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்ளும் நமது பாரம்பரிய உணர்வு மங்கிப் போகாமல் பெருமளவு உயர்ந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்.