திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டை நேரில் பெற்றுக்கொள்ளலாம்

 
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த 10 நாட்களுக்கு உண்டான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. 

இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா சவுத்திரி, “திருப்பதி திருமலையில் சொற்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களுக்கு உண்டான  1.20 லட்சம்  இலவச சர்வ தரிசன டோக்கன்கள் ஜனவரி 9 ஆம் தேதி காலை 5 மணி முதல் தொடர்ந்து வழங்கப்படும். மூன்று நாட்களுக்கு உண்டான டோக்கன்கள் முடிந்த பின்னர்  அந்தந்த  நாட்களுக்கு உண்டானது  முந்தைய நாள் டோக்கன்கள் வழங்கப்படும். இதற்காக  திருப்பதியில் ராமச்சந்திர புஷ்கரிணி, பூதேவி காம்ப்ளக்ஸ், ஜீவகோனா அரசு உயர்நிலைப்பள்ளி, மாநகராட்சி மைதானம், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள அரசு உயர்பள்ளி மற்றும் திருமலை  பாலாஜி நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் திருமலை உள்ளூர் மக்களுக்காக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  

திருப்பதி கோவில்

திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுன்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற வேண்டும். இந்த முறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும் . சொற்கவாசல் அனுமதிக்கப்படும் ஜனவரி 10 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை இந்த 10 நாட்களுக்கு தரிசன டிக்கெட், இலவச டோக்கன் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாது. டோக்கன் வழங்கப்படும் கவுண்டர்கள் அமைக்கப்படும் பகுதிகளில் சிறப்பு வரிசைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும்.எனவே ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது  சர்வ தரிசன  டோக்கன்களுடன் வரும் பக்தர்கள்  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம்” என்றார்