சரியான நேரத்துக்கு சமைத்து வைக்காத மனைவி... கணவன் மரணம்
சரியான நேரத்திற்கு உணவு சமைத்து வைக்காததால் மனைவியை கடுமையாக திட்டி இருக்கிறார் கணவன். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போதும் கணவர் கடுமையாக திட்டியிருக்கிறார். இதில் மனவேதனை அடைந்த மனைவி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார். உடனே அவர் வேக வேகமாக சென்று வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்திருக்கிறார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் கணவர். அவர் சத்தம் போட்டுக்கொண்டே ஓடிச்சென்று கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று குதித்திருக்கிறார்.
இருவரும் சத்தம் போட்டுக்கொண்டே அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்ததை பார்த்த அப்பகுதியினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்த இருவரையும் மீட்க முயன்றிருக்கிறார்கள். கிணற்றில் விழுந்த மனைவி குழாயை பிடித்துக் கொண்டதால் அவர் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த கணவர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்துவிட்டார். அவரை சடலமாகத்தான் மீட்டிருக்கிறார்கள்.
மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த கணவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.