பலியாக இருந்து உயிர் பிழைத்தேன் - 5 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த பாவனா
இது எளிதான பயணம் அல்ல. பலியாக இருந்து உயிர் பிழைக்கும் வரையிலான பயணம் என்று நடிகை பாவனா தனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரம், சோகம் குறித்து முதன் முதலாக மனம் திறந்திருக்கிறார்.
அவர் மேலும், ஐந்து ஆண்டுகளாக, என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தினால் எனது பெயரும் எனது அடையாளமும் நசுக்கப்பட்டுள்ளது. நான் குற்றம் செய்தவள் இல்லையென்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியானக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன. அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். இப்போது அதைக் கேட்கும்போது, எனக்காக ஒலிகும் பல குரல்களை கேட்கும்போது நீதிக்கான இந்த போராட்டத்தில் நான் தனியாள் இல்லை என்பதை நான் உணர்கின்றேன். நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், என்னைப்போல் வேறு யாரும் இதுபோன்ற சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பயணத்தை தொடர்வேன். என்னுடன் நின்ற அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றி என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை பாவனாவுக்கு நடந்த அந்த சம்பவம் கேரள திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிரவைத்தது. நடிகை பாவனா கடந்த 2017ஆம் ஆண்டில் கேரளாவில் நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வந்திருக்கிறார். இதுகுறித்த வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடந்த சம்பவத்தில் 2022 பிப்ரவரி மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகை பாவனா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, போட்டோக்கள் எடுக்கப்பட்டது என்றும், அது திலீப்பிடம் இருக்கிறது என்றும், அவர் உள்பட பலரும் அந்த படங்களை பார்த்திருக்கிறார்கள். அது தனக்கு தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலசந்திரகுமார் அண்மையில் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேட்டியளித்திருந்தார் .
பாலசந்திரகுமார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை பாவனா கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பிலும் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திலீப்புக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் திலீப் கேரள டிஜிபி அணில் காந்தியிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் நடிகை பாவனா பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சி செய்கிறது. பாலச்சந்திரகுமார் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார் தான் இருக்கிறார்கள். இதன்மூலம் எனக்கு எதிராக சதி வேலை செய்வதாக சந்தேகம் இருக்கிறது என்கிறார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலச்சந்திர குமாரின் புகார் தொடர்பாக நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தி அறிக்கையை வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், பாவனா தனது நிலை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு பின்னர் இந்த விவகாரத்தில் மனம் திறந்து பதிவிட்டிருக்கிறார்.