பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்கிற விரக்தியில் தற்கொலை - ஆனால் வயிற்றுக்குள் இருந்தது ஆண் குழந்தை
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு வந்த அந்தப் பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்து இரண்டாவது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறார். ஒருவேளை பெண் குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்கிற மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றுக்குள் ஆண் குழந்தை இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதைக்கேட்டு உறவினர்கள் கதறி அழுதிருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு பரிதாப சம்பவம் .
அம்மாநிலத்தில் என்டிஆர் நகர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ரம்யா. இவர் முதல் முறையாக கர்ப்பமடைந்த போது தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக அவர் கர்ப்பம் ஆனதும் இந்த முறையும் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று ரம்யாவிடம் உறவினர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்திருக்கிறார்.
ஆனாலும் உறவினர்கள் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று சொன்னதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. பிரசவ தேதி நெருங்க நெருங்க மன உளைச்சலில் இருந்திருக்கிறார். பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்கிற விரக்தி அதிகமாகி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சம்பவம் அறிந்த போலீசார் வீட்டிற்கு வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் ரம்யாவின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பது தெரியவந்ததும் உறவினர்கள் கதறி அழுதிருக்கிறார்கள்.
ஆண் குழந்தைக்கு தானே ஆசைப்பட்டாய். நினைத்தது மாதிரியே ஆண் குழந்தை பிறந்து இருக்குமே. ஆனால் சந்தேகப்பட்டு இப்படி உன் வாழ்க்கையை நீயே அழித்துக் கொண்டாயே என்று உறவினர்கள் கதறி அழுதிருக்கிறார்கள்.
தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.