லத்தி ஒன்றே தீர்வு! சர்வாதிகாரம்தான் சரியான முடிவு - கங்கனா ரனாவத் எதிர்க்குரல்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று நாடெங்கிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவந்தனர் . டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து 3 வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர பாஜக முயற்சி செய்தது. ஆனால் தங்களுக்கு திருத்தம் தேவை இல்லை 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராடி வந்த போராடி வந்தனர்.
இதுதொடர்பாக டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. அது உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல உயிரிழப்புகளும் இந்த போராட்டங்களில் ஏற்பட்டு நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுதொடர்பான போராட்டங்களால் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்பவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை கங்கனா ரனாவத் வழக்கம்போலவே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அல்லாமல் தெருக்களில் இருப்போர் சட்டங்களை இயற்ற தொடங்கிவிட்டால் அது பயங்கரவாத தேசம்தான் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் மேலும் இந்திரா காந்தியின் 104வது பிறந்த தினத்தை முன்னிட்டும் அவர், தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.