காஷ்மீர் முதல்வராகிறார் உமர் அப்துல்லா!
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

90 சட்டப்பேரவை தொதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செப். 18, செப். 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்று உள்ளதாலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் இந்தத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 21 தொகுதிகளில் களம் கண்ட குலாம் நபி ஆசாத்தின் கட்சி, 62,654 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சி, பின்னர் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாக இரு வேட்பாளர்களை திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளது.பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இதனிடையே ஜம்முகாஷ்மீர் நவ்ஷேரா தொகுதியில் படுதோல்வியை சந்தித்த பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா பதவியை ராஜினாமா செய்தார்.


