“விவசாயிகள் போராட்டம் குறித்து புரிதலுடன் பதிவிடுங்கள்” – ரிஹானாவை எச்சரிக்கும் மத்திய அரசு!
விவசாயிகளின் போராட்டம் குறித்து பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்கள் கருத்து தெரிவித்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகிவருகிறது. அதற்குக் காரணகர்த்தா பிரபல பாப் பாடகியான ரிஹானா தான். அவர் போட்ட ஒரு ட்வீட் உலக மக்கள் அனைவரின் கவனமும் விவசாய போராட்டத்தின் பக்கம் திரும்பியது. இதன்பிறகு சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிபா உள்ளிட்ட பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். தற்போது வெளிநாட்டுப் பிரபலங்கள் அனைவர் மத்தியிலும் ஆதரவு பெருகிவருகிறது.
இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகத்தை வைத்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் முன்பு உண்மைகளை அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து சரியான புரிதல் ஏற்பட்ட பின் பதிவிடுங்கள். பிரபலங்களால் வெளியிடப்படும் சமூக ஊடக ஹேஷ்டேக்குகளும் கருத்துகளும் துல்லியமானதாகவோ அல்லது பொறுப்பானதாகவோ இல்லை.
வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நாங்கள் அவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளைத் நடத்தி வருகிறோம். பிரதமர் மோடி கூட பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வேளாண் சட்டங்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களைத் திசைதிருப்பவும் முயல்கின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத் திரட்டிவருவது துரதிருஷ்டவசமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.