ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில், இன்று டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் மூன்றாம் அலையாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள், இரவு நேர ஊரடங்கு, முழு பொதுமுடக்கம் ஆகிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,64,202 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது நேற்றைய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட 4,631 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஒரேநாளில் 1,22,684 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 14,17,820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இந்தியாவை மிரட்டி வரும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையானது 6,041 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 5,753 ஆக இருந்த நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.