ஆளுநரின் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை - கடிதத்தில் இருந்த மரண வாக்குமூலம்
ஆளுநரின் கார் டிரைவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எழுதியிருக்கும் தற்கொலை கடிதத்தில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரது மரணம் குறித்து பரபரப்பு எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் கார் டிரைவர் தேஜஸ். இவர் நேற்றைய தினம் ஆளுநர் ஆரிப் முகமது கானை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்றிருக்கிறார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் அறையிலிருந்து வெளியே வராததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கிறார்கள்.
அப்போது தேஜஸ் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கார் டிரைவர் தேஜஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தை அறிய அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் தேஜஸ் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது . அந்த கடிதத்தில் இது என் மரண வாக்குமூலம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த மரண வாக்குமூலத்தில் , எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் சாகப் போகிறேன். என் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத் தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும், வாட்ஸ் அப்பிலும் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள போகிறேன் என்று ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருக்கிறார்.
ஆளுநரின் கார் டிரைவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனிப்பட்ட காரணத்துக்காகத்தான் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது மரணம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.