வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவன்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் மாணவர் திடீரென்று வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் பட்டாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரண் அனந்தபுரம் மாவட்டம் சோமுல தொட்டி பகுதியில் உள்ள நாராயணா ஜுனியர் கல்லூரியில் இன்டர்மீடியட் (பிளஸ் ஒன் ) படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் கல்லூரியில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென சரண் தனது இருக்கையில் இருந்து எழுந்து வகுப்பறையில் இருந்து வெளியே வந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சடைந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஓடி சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மாணவர் சரண் பலத்த காயம் அடைந்து இருப்பதை பார்த்து உடனடியாக கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.
சமீபத்தில் சங்கராந்தி விடுமுறைக்காக வீடு சென்று திரும்பி கல்லூரிக்கு வந்த சரண் தற்கொலை செய்து கொண்டு இறந்தது அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரண் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டாரா, காதல் விவகாரமா அல்லது கல்லூரி மாணவர்கள் ராகிங் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.