நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் 7வது கூட்டம் - டெல்லியில் நாளை நடைபெறுகிறது ..

 
modi

நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சிலின் ஏழாவது கூட்டம் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பு முதலில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்  திட்ட கமிஷன் அமைப்பாகவே செயல்பட்டு வந்தது.   பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு  திட்ட கமிஷன் அமைப்பு கலைக்கப்பட்டு,  மாறாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது.  அதன்பிறகு  மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக செயல்பட்டு வரும்  நிதி ஆயோ க்கின் உயரிய அமைப்பாக ,  நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது.  இந்த குழுவிற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.

NITI Aayog

பிரதமர் தலைமையில் இயங்கி வரும் நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சிலின் முதல் கூட்டம் கடந்த  2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.  அதன் பிறகு இந்த கூட்டமானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக நடத்த முடியாமல் போனது.  அதன் பிறகு மீண்டும் கடந்த ஆண்டு வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நிதி ஆயோக்  கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த  நிலையில் தற்போது கொரோனா பரவல்கள் குறைந்துள்ள நிலையில்,  நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Modi - NITI Aayog

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின்  கலாச்சார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.   நாளை நடைபெறும் இந்த நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல்,  தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம்,  நகர்ப்புற நிர்வாகம் உள்ளடவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.