இந்தியாவில் நுழைந்த குரங்கு அம்மை.. அறிகுறியும்.. தீர்வும்..
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களது உடைமைகளை பயன்படுத்தக்கூடாது என்றும், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஒரு அரிய வகை தொற்று நோயாகும். குரங்கு அம்மை வைரஸில் இரண்டு தனித்தனி மரபுகள் இருக்கின்றன. முதலாவது மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் காங்கோ கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. குரங்கு அம்மை நோய் பொதுவாக மனிதர்கள் இடையே எளிதில் பரவாது என்கிறார்கள். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் கொரோனா போன்று சளி, இருமல், தும்மல் போன்றவற்றால் இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளது.
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இதர நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும் பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் இந்த கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி தரமற்ற மருந்து சேவையைப் பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயினால் இறக்கும் சாத்தியம் கூட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் நோய் பாதித்தவர்கள் சில வாரங்களில் குணமடைந்து விட முடியும் என்றும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக சிகிச்சைகள் எதுவும் இல்லை என்றாலும், பெரியம்மை தடுப்பூசிகளே இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.
முதன் முதலி, ஆப்ரிக்கா நாட்டில் தோன்றிய குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. அதிலும், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் என மொத்தம் 60 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவில் இருந்து கேரளா வந்துள்ள இளைஞர் ஒருவர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். மேலும் அவருடன் இருந்த உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருக்கின்றனர். மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உடைமைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.