நான் தூக்கிலிடப்பட தயார்.. நீங்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?? - பரபரப்பை கிளப்பும் சுகேஷ்..
ஆம் ஆத்மி கட்சி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் ஒரு கடிதம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு மற்றும் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்குகளில் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். சிறை தண்டனை பெற்று வரும் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் கைலாஷ் கெலாட் , சத்தியேந்திர ஜெயின் ஆகியோர் மீது பரபரப்பு புகார் அளித்து 3வது கடிதத்தை டெல்லி ஆளுநர் விஜய குமாருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு சுகேஷ் எழுதிய மற்றொரு கடிதத்தில், ஏன் நீங்கள் ஜெயினுடன் ஹயாத்தில் நடந்த எனது இரவு விருந்தில் கலந்து கொண்டீர்கள்?, அசோலாவில் உள்ள ஹெக்லோட்டின் பண்ணை வீட்டில் வைத்து நான் தந்த 50 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டீர்கள்?, நான் நாட்டின் பெரும் பயங்கரவாதி என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் என்னிடம் 50 கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு, எனக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொன்னீர்கள்? என்று பல்வேறு கேள்விகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம் கேட்டிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் மூன்றாவ்து கடிதத்தை எழுதியிருக்கிறார்.
சுகேஷ் சந்திர சேகர் தனது வழக்கறிஞர் ஏ.கே.சிங் மூலம் வெளியிட்ட அந்தக் கடிதத்தில், தான் முதலில் எழுதிய கடிதம் வெளியான பிறகு அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், சிறைத்துறை டிஜி சந்திப் கோயல் ஆகியோர் தனக்கு சிறையில் நெருக்கடி தருவதாக தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும், “ கெஜ்ரிவால் ஜி, நீங்கள் மற்றும் உங்கள் கூட்டாளிகள் கூறியது போல் டெல்லி எல்ஜியிடம் நான் எழுப்பிய பிரச்சனைகளில் ஏதேனும் தவறு இருந்தால், நான் தூக்கிலிடத் தயாராக இருக்கிறேன். ஆனால் புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலகிவிடுவீர்களா?” என்று கேட்டிருக்கிறார். 3 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் 7 கேள்விகளை / புகார்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.