இந்தியா- பிரிட்டன் இடையேயான விமான சேவை ஜனவரி 8 முதல் தொடங்கும்- போக்குவரத்து அமைச்சகம்
பிரிட்டனில் தற்போது புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. B117 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா 70% வேகமாக பரவுக்கூடிய தன்மை கொண்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பிரிட்டனில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை நாடுகள் பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்தன. அந்த வகையில், இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் தடை விதித்தது. இந்த தடையை ஜனவரி 7 ஆம் தேதி நீட்டித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் பிரிட்டனுடனான விமான சேவை ஜனவரி 8 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். முறையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் அடுத்த மாதம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 29 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.