கொரோனாவில் புதிய உச்சம் தொட்ட இந்தியா! – ஒரே நாளில் 78,357 பேருக்கு பாசிடிவ்
கொரோனாவில் புதிய உச்சத்தை இந்தியா தொட்டுள்ளது. ஒரே நாளில் 78,357 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றில் இந்தியா தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,69,524 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8,01,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29,019,09 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1045 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 66,333 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது உலக அளவில் கொரோனாத் தொற்றும் மற்றும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நோய்த் தொற்று அடிப்படையில் 39,50,779 பேருடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா இன்று 37.69 லட்சத்தைத் தொட்டுள்ளது.
நாளை 38 லட்சத்தைத் தொட்டுவிடும். இரண்டு, மூன்று நாட்களில் உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துவிடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது உலக அளவில் 2 கோடியே 53 லட்சத்து 34 ஆயிரத்து 339 பேருக்கு தொற்று உள்ளது. முதல் இடத்தில் 60 லட்சம் நோயாளிகளுடன் அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.