கொரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை 70,000 யைக் கடந்த டெல்லி!
கடந்த ஆண்டு டிசம்பர் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது.
புது டெல்லியில் நோய்த் தொற்று என்பது தொடக்கம் முதலே அதிகளவில்தான் உள்ளது. இந்திய அளவில் மகாராஷ்ட்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லிதான் அதிகக் கொரோனா நோயாளிகள் உள்ள பகுதியாக இருக்கிறது. 66,602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 39,000 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தனர். ஆனால், கொரொனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்து எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும் என, எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியாக வந்திறங்கியது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,000 யைக் கடந்தது. இதில் 41,437 பேர் குணமடைந்துள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 2365 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் சோதனை செய்யப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி ஜூலை 6-ம் தேதி வரை புது டெல்லிக்குள் உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொரோனா பரிசோதனை செய்யவிருக்கிறது.