புழல், சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு!
சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நேற்று இரவில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடர்த்தியான மழை பெய்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் நீர் வரத்து 160ல் இருந்து 971 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன அடியில் தற்போது 2,094 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மேலும், சோழவரம் ஏரியின் நீர் வரத்து 116 கன அடியாக இருப்பதால் தற்போது அந்த ஏரியில் 128 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.