வீரர்களின் மரணத்துக்கு பழிவாங்க சீன எல்லையை நோக்கிய சென்ற சிறுவர்கள்…. தடுத்து நிறுத்திய போலீசார்
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீற நுழைய முயன்றபோது அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து அவர்களின் முயற்சியை தோல்வி அடைய செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இது நம் நாட்டு மக்கள் இடையே பெரும் கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது மற்றும் ஒரு சிலர் தங்களது தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் தங்களது வீட்டு டி.வி. உள்ளிட்ட சீன எலக்ட்ரிக் சாதனங்களை உடைத்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் இந்திய வீரர்களின் வீரமரணத்துக்கு பழிவாங்க இந்திய-சீன எல்லை நோக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு மற்றும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கிராமம் அமரத்பூர். அந்த கிராமத்தின் தெருக்களில் 7 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் அடங்கிய குழு ஒன்று ஓடுவதை போலீசார் பார்த்துள்ளனர். உடனே அவர்களை தடுத்து நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என போலீசார் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதிலால் போலீசார் ஆடி விட்டனர். போலீசார் கேட்ட கேள்விக்கு சிறுவர்கள் இந்திய வீரர்களின் மரணத்துக்கு பழிவாங்க இந்திய-சீன எல்லைக்கு போவதாக உறுதியாக மற்றும் நம்பிக்கையாக பதில் அளித்தனர். பின் போலீசார் அவர்களிடம், வீரர்களின் மரணத்துக்கு பழிவாங்கப்படும் உறுதியளித்தனர் மேலும் வீடுகளுக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் சிறுவர்களின் தேசபக்தியை பாராட்டி வருகின்றனர்.