லாக்டவுனால் மோசமான குடும்ப பொருளாதார சூழ்நிலை.. உணவு டெலிவரி ஏஜெண்டாக மாறிய 12ம் வகுப்பு மாணவி
ஒடிசாவில் லாக்டவுன் காலத்தில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை மோசமானதால், தனது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் உணவு டெலிவரி ஏஜெண்டாக பணியாற்றி, பலருக்கும் நல்ல முன்மாதிரியாக திகழ்கிறார்.
ஒடிசாவில் கட்டாக்கில் உள்ள சைலபாலா மகாவித்யாலயாவில் 12ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவு மாணவி பிஷ்ணுபிரியா ஸ்வைன். இவர் அவரது பெற்றோரக்கு மூத்த குழந்தை. பிஷ்ணுபிரியா ஸ்வைனின் தந்தை டிரைவராக பணியாற்றி வந்தார். லாக்டவுன் காரணமாக தற்போது அவர் வேலையில்லாமல் உள்ளார். வருமானம் இல்லாததால் பிஷ்ணுபிரியா ஸ்வைனின் குடும்பத்தின் நிதி நிலை மோசமடைந்தது. இதனையடுத்து குடும்பத்துக்கு உதவ மற்றும் தனது கல்விக்கு தேவையான நிதி தேவையையும் பூர்த்தி செய்ய பிஷ்ணுபிரியா ஸ்வைன் உணவு டெலிவரி ஏஜெண்ட் வேலையில் சேர்ந்தார்.
பிஷ்ணுபிரியா ஸ்வைன்இது தொடர்பாக கூறியதாவது: லாக்டவுனால் எனது குடும்பத்தின் நிதி நிலை மோசமடைந்தது. இது எனது கல்வியை பாதித்தது. எனவே எனது சொந்த கல்விக்கு தேவையான பணத்துக்கும், எனது குடும்பத்துக்கும் உதவுவதற்கும் வேலை செய்ய நான் முடிவு செய்தேன். ஆரம்பத்தில் நான் டியூஷன் எடுத்தேன். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது மாணவர்கள் டியூசனுக்கு வருவதை நிறுத்தி விட்டனர். நாங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டோம். எனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக நான் நிறுவனத்தில் சேர்ந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்டாக்கில் உணவு டெலிவரியில் ஈடுபடும் முதல் பெண் பிஷ்ணுபிரியா ஸ்வைன் என்று கூறப்படுகிறது. தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அவரது வைராக்கியத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மாணவி பிஷ்ணுபிரியா ஸ்வைனின் தந்தை இது தொடர்பாக கூறுகையில், கோவிட்-19 லாக்டவுனால் நான் எனத டிரைவர் வேலையை இழந்தேன். என் மனைவி குடும்ப பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். அவள் தனது வேலை மூலம் உதவினாள். என் மகள் கூட டியூஷன் எடுத்து குடும்பத்துக்கு பங்காற்றினாள். கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மாணவர்கள் டியூஷனுக்கு வருவதை நிறுத்தினர். இதனால் என் மகள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். எங்கள் மகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், அவளது சாதனைகளில் மகிழ்ச்சியடைகிறோம். மற்றவர்கள் பின்பற்றுவதற்கு அவள் ஒரு முன்மாதிரி வைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.