பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…
பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில் அவர் நேற்று காலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ் ஷா சுட்ட கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மனைவியின் சகோதரர் கூறியதாவது: ராஜேஷ் ஷா எப்போதும் காலையில் 6 மணிக்கு நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.
அது போன்று இன்று (நேற்று) காலை 6 மணிக்கு வாக்கிங் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர். தகவல் கிடைத்தவுடன் நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்றோம். பின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து அவரை அங்கு கொண்டு சென்றோம்.
ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனிப்பட்ட பகை காரணமாக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பீகாரில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.