மக்களுக்கு உதவ.. ரூ.4 லட்சம் சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கிய கிராம தலைவர்
ஆந்திராவில் கிராம தலைவர் ஒருவர் தனது கிராம மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.4 லட்சம் சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கி பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் அம்பாபுரம். இந்த கிராமத்தின் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காண்டிகோட்ட சீதையா. இவர் தொற்றுநோய் காலத்தில் தனது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதியுள்ள மக்களின் சிரமத்தை போக்கும் நோக்கில் தனது ரூ.4 லட்சம் பணத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக அம்பாபுரம் தலைவர் காண்டிகோட்ட சீதையா கூறியதாவது: மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ்களில் ஏற்றி செல்ல வேண்டியிருந்தபோது சிரமங்களை எதிர்க்கொண்ட மக்களின் அவலநிலை குறித்து கவலை அடைந்தேன். கொரோனா வைரஸ் 2வது அலையில் ஆம்புலன்ஸ் இல்லாததால் ஏற்பட்ட சிக்கல்களை நாங்கள் கவனித்தோம்.
கிராமத்தினர் யாராவது ஆம்புலன்ஸ் வேண்டி 108 எண்ணுக்கு போன் செய்தால், அடிக்கடி தாமதமாக வருகின்றனர் அல்லது வருவதில்லை. 1 அல்லது 2 கி.மீட்டராக இருந்தாலும் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் அதிகமாக உள்ளது. அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு மக்களை அழைத்து செல்ல வாடகைக்கு ஆட்டோ ரிக்ஷா மற்றும் எனது கார் பயன்படுத்தப்பட்டது. ஆனால்அவற்றில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியவில்லை. இதனால் எனது சொந்த காசில் ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்தேன். இதற்கு ரூ.4 லட்சம் செலவானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.