“குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை” : கமல் ஹாசன் வேண்டுகோள்!
தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம் என்று கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு பேரிடரின் போதும் அதற்குப் பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்பவர்கள் இளம் சிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் மிக எளிதில் கல்வி இடைநிற்றல் ,பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் போன்ற சுரண்டலுக்கு ஆளாகி விடுகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் 1.30 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெறும் என யூனிசெப் எச்சரித்தது.
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக CRY தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் ,தர்மபுரி, திண்டுக்கல் ,ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன . மிக ரகசியமாக நிகழ்வதால் இந்த கசப்பான உண்மை வெளியுலகிற்கு தெரியாமலேயே சென்றுவிடுகிறது.
கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் சேலத்தில் 98, தர்மபுரியில் 192 என தமிழகத்தில் சுமார் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகம் . அறியாமை, மூடநம்பிக்கை ,சாதிப் பற்று ,வறுமை ,ஊரடங்கு காலத்தில் திருமண செலவுகள் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன.
உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறினால் இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். அரசியல் விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சமூக நலத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.