5 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் மாதம் ரூ.1500 உதவித்தொகை, இலவசக்கல்வி, இலவச மருத்துவம் -கேரளாவில் அதிரடி
5 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் குடும்பத்திற்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கேரளாவில்.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் ஆயர் ஜோசப் கல்லரங்காட் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து ஆலயங்களுக்கும் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், பாலா மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவசக் கல்வியும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலா மறைமாவட்ட குடும்பநல இயக்க பாதிரியார் ஜோசப் குற்றிங்கல், கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கேரள மாநிலத்தில் 18 புள்ளி 38 சதவீதமாக இருந்த கத்தோலிக்கர்கள் இப்போது 14 சதவீதம் மட்டுமே உள்ளனர். அதனால்தான் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.