“பணம் தராவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவேன்”… காதலன் மிரட்டியதால், கல்லூரி மாணவி தற்கொலை!
கோவை
கோவையில் பணம் கேட்டு ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால், மனமுடைந்த தனியார் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் லாவண்யா (19). இவர் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில், லாவண்யாவுக்கு, சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வரும், மானாமதுரையை சேர்ந்த கேசவகுமார் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கேசவகுமார் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, லாவண்யாவிடம் இருந்து ரூ.35 ஆயிரம் பணம், 2 சவரன் நகைகளை பறித்து கொண்டுள்ளார். மேலும், பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததால், லாவண்யா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேசவகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்காவிட்டால், தங்களிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து, வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று முன்தினம் விட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, லாவண்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில சிங்காநல்லூர் போலீசார், கேசவகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.