“எம்.ஜி.ஆரை நான் கையில் எடுக்கவில்லை” – கமல்ஹாசன் பேச்சு
தஞ்சாவூர்
எம்.ஜி.ஆர் கூறியது போல இல்லாமையை, இல்லாமல் ஆக்குவோம் என்பதை கொண்டு வரக்கூடிய கட்சி தான் மக்கள் நீதி மய்யம் என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையின், இரண்டாம் நாளான இன்று அவர் தஞ்சை அண்ணாநகர் பகுதியில் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, தான் எம்.ஜி.ஆரை கையில் எடுக்கவில்லை எனறும், அவர் தான் தன்னை முதன்முதலில் எடுத்து, தோளில் சுமந்தார் என்றும் கூறினார். தற்போது உள்ளவர்கள் வாக்குகளை வாங்குவதற்காக, ஏழ்மையை மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், நேர்மை என்று சொல்வதற்கு ஆண்ட கட்சிகளுக்கும், ஆளும் கட்சிகளுக்கும் தைரியம் கிடையாது என்றும் கூறினார்.
முன்னதாக, தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும் என்றும், அரசின் தேவைக்கேற்ப அதனை வழங்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், எம்ஜிஆர் கொண்டு வந்த தமிழ் பல்கலைக் கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம் என தெரிவித்த அவர், சரஸ்வதி மஹால் நூலகம் மொத்தமாக களவு போகும் முன்பு அதை மீட்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பின்னர், உலகத்திலேயே மிக எடை குறைவான செயற்கைக்கோளை உருவாக்கிய தஞ்சை மாணவர் ரியாஸ்தீனுக்கு கமலஹாசன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.