மனையை விற்க கையெழுத்துபோட மறுப்பு… காதல் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன்

 

மனையை விற்க கையெழுத்துபோட மறுப்பு… காதல் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன்

வீட்டு மனையை விற்பனை செய்ய கையெழுத்து போட மறுத்த காதல் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றுள்ளார் கணவன். அந்த அதிர்ச்சி சம்பவம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தாதம்பாளையத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 மாத கைக்குழந்தை இருக்கிறது. போதைக்கு அடிமையான கலியபெருமாள் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதோடு, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். இந்த நிலையில், மனைவி பெயரில் உள்ள வீட்டு மனையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று குடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்துள்ளார் கலியபெருமாள், அப்போது, மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்பனை செய்வதற்காக கையெழுத்து போட சொல்லியுள்ளார். ஆனால், மனைவி பிரேமா கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கலியபெருமாள், உலக்கையை எடுத்து மனைவியின் தலைமையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பிரேமா, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். போதையில் மனைவியை கொன்ற கலியபெருமாள் என்ன செய்வதற்கு என்று தெரியாமல், மாமியாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அலறி அடித்துக் கொண்டு பெற்றோர் ஓடிவந்தனர்.

மனைவியை கொன்றுவிட்டோம் என்ற பயத்தில் வளவனூர் காவல் நிலையத்தில் கலியபெருமாள் சரணடைந்தார். இதையடுத்து, பிரேமாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பிரேமாவை கொலை செய்ய மகன் கலியபெருமாளை அவரது தாயார் சூரியகாந்தி தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.