கணவனை பிரிந்து வாழ்ந்தார்… கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்… எஸ்கேப் ஆன நாய் பண்ணை ஓனர்

 

கணவனை பிரிந்து வாழ்ந்தார்… கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்… எஸ்கேப் ஆன நாய் பண்ணை ஓனர்

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் வேலை செய்த நாய் பண்ணையில் கொன்ற புதைக்கப்பட்டுள்ளார். இந்த பண்ணையின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த காட்வின் என்பவருடன் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே உள்ள வாணியமல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் பிரியங்கா. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பிரியங்கா, தனது கணவர் சீனிவாசனை பிரிந்து காட்வினுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நாய் பண்ணையை பராமரித்து வந்துள்ள பிரியங்கா, திடீரென காணவில்லை என செகந்திராபாத்தில் வசித்து வரும் அவரது சகோதரர் விக்ரம், ஆன்லைன் மூலம் பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, நாய் பண்ணையில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் மூலம் பிரியங்காவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாய் பண்ணை அருகே உள்ள தைலமர தோப்பில் உள்ள கிணற்றில் மிதந்த பைகளை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை பிரித்து பார்த்தனர். அதில், போதை பவுடர் இருந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வந்து அந்த பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பிரியங்காவுடன் வாழ்க்கை நடத்தி வந்த பண்ணை உரிமையாளர் காட்வினை காவல்துறையினர் தேடி வந்தனர்.