குடும்ப தகராறில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற கணவர் கைது!
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண்ணை அரிவாள்மனையால் வெட்டிகொன்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஏழுமலை(28). இவரது மனைவி சசிகலா(26). ஏழுமலை பெண் ஒருவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை சசிகலா கண்டித்ததால், தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு இந்த விவகாரம் குறித்து தம்பதியினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து சசிகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்துப்பகுதியில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெருநகர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்தனர்.