பக்கத்து வீட்டுக்காரருடன் மனைவி பார்த்த வேலை! வெளியூரில் வேலை பார்த்து வந்த கணவனுக்கு தெரிந்ததால் நடந்த விபரீதம்!
கணவன் வெளியூரில் வேலை செய்து வந்ததால் பக்கத்து வீட்டுக்காரருடன் தொடர்பில் இருந்து வந்தார் இளம்பெண். இது கணவனுக்கு தெரியவந்ததும், அவர் ஆத்திரத்தில் அரிவாள் தூக்கியதால் இரு குடும்பமும் சின்னாபின்னமாகி கிடக்கிறது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் துருசுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். வயது 25. இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சித்ரா. வயது 22. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். குருநாதனின் பக்கத்து வீட்டுக்காரர் வீரையன். வயது 38. விவசாய கூலித் தொழிலாளி. வீரையனுக்கு வீரச்செல்வி என்ற மனைவி, ஒரு மகள், 3 மகன்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
குருநாதன் திருப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், ஏற்கெனவே நான்கு குழந்தைகளுக்கு தந்தையான வீரையனுக்கும் சித்ராவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த குருநாதன் அவர்களிருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர்களிருவரும் கள்ளத் தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, வீரையனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார் குருநாதன். அதன்படி, நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணியளவில் வீரையன் அவரது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் மீது குருநாதனும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து சரமாரியாக கல்லெறிந்துள்ளனர்.
கல்லெறிந்தது யார் என்பதை அறிய கதவைத் திறந்து வெளியே வந்த வீரையனை, குருநாதனும் அவரது கூட்டாளிகளும் கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வீரையனை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று பிற்பகல் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, செங்கிப்பட்டி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குருநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.