27 வருடமாக குழந்தை இல்லை… கசந்த திருமண வாழ்க்கை… மனைவி கொடூர கொலை… தீயில் கருகி உயிரைவிட்ட கணவன்

 

27 வருடமாக குழந்தை இல்லை… கசந்த திருமண வாழ்க்கை… மனைவி கொடூர கொலை… தீயில் கருகி உயிரைவிட்ட கணவன்

திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன், தீக் குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தோப்புதுறையை சேர்ந்த விஜயன்- சபிதா தம்பதிக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. விஜயன் அங்குள்ள மெடிக்கல் ஷப்பில் வேலை செய்து வந்தார். தனக்கு குழந்தை இல்லாததால் வேதனையில் இருந்து வந்துள்ளார் விஜயன். இதனால் கணவன்- மனைவி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று தம்பதி இருவருக்குள் மீண்டும் தகராறு நடந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த விஜயன், சபிதாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் கீழே விழுந்த சபிதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார் விஜயன். இதில் தலை நசுங்கி சபிதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஆத்திரத்தில் நடந்த இந்த விபரீத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விஜயன் தனது உடலில் மண்எண்ணெய்யை எடுத்து ஊற்றி தீ பற்ற வைத்தார். வேதனையில் அலறிய விஜயனின் சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். ஆனால், விஜயன் உடல் கருதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்பகோணம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “விஜயன்- சபிதாவின் ஆரம்ப கால திருமணம் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுள்ளது. நாட்கள் ஆக ஆக குழந்தை ஏக்கம் ஏற்பட்டுள்ளது விஜயனுக்கு. ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. திருமணம் நடந்து 27 ஆண்டுகள் ஆன நிலையில் இனி குழந்தை இருக்காது என்று கருதி விஜயன், அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார் . சம்பவத்தன்றும் குழந்தை இல்லாதது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை கொன்றதோடு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இருந்தாலும் வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா? என்றும் விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.