’சாதி சொல்லி தாக்கப்பட்ட இருளர் பெண்’ 2 வாரத்தில் அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்
விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி எனும் சின்னக் கிராமத்தில் வசிப்பவர் தனலட்சுமி. இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தக் கல்வி ஆண்டில் (2019 -2020) 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்.
தனலட்சுமி ஜாதி சான்றிதழ் கோரி முறையாக விண்ணபித்தும் அவருக்குக் கொடுக்கப்பட வில்லை. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. இதனால் அப்பகுதி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரடியாக தனலட்சுமியின் வீட்டுக்கே வந்தனர். அலுவகத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றனர்.
அந்த அலுவலகத்திற்கு தனலட்சுமி சென்றபோது அங்கே பலர் திரண்டு இருந்திருக்கிறார்கள். அவர்கள் தனலட்சுமிக்கு இருளர் இனச் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்று வம்பு வளர்த்திருக்கிறார்கள். முடிவில் அடிதடியாகி விட்டது.
இதுபற்றி தனலட்சுமி சொல்லும்போது ’நாங்கள் இருளர் ஜாதி இல்லை என்றும் எங்களுக்கு இருளர் எனச் சான்றிதழ் கொடுக்கக்கூடாது. எம்.பி.சி என்றே கொடுக்க வேண்டும் என்று சிலர் வம்பு வளர்த்தார்கள். பேச்சுவார்த்தை முற்றிபோய் அவர்கள் என் ஜாதியை சொல்லி திட்டி அடித்தார்கள்’ என்கிறார்.
irua
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலனில்லை. செய்தி மீண்டும் ஊடகங்களில் வெளியானது, தற்போது மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, ‘தனலட்சுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என மனித உரிமை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.