கொரோனா சுவாசத் திணறலை உணர்வது எப்படி?

 

கொரோனா சுவாசத் திணறலை உணர்வது எப்படி?

கொரோனா இரண்டாம் அலையில் சுவாசத் திணறல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. முதல் அலை கொரோனாவின் போது சுவாசத் திணறல் மிகப்பெரிய சவாலாக இல்லை. ஆனால், இரண்டாம் அலையில் அதுதான் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

கொரோனா சுவாசத் திணறலை உணர்வது எப்படி?

இயல்பான சுவாசிக்கும் திறனை மீறி மிக வேகமாக காற்றை இழுப்பது, காற்று போதுமானதாக இல்லை என்ற உணர்வையே சுவாசம் அல்லது மூச்சுத் திணறல் என்கிறோம். மருத்துவத்தின் படி ஒருவரால் போதுமான அளவு சுவாசிக்க முடியாததால், நுரையீரலுக்கு போதுமான காற்று சென்று வராததால், சுவாசிக்கும்போது நெஞ்சில் இருக்கம், வலி போன்றவை ஏற்படுவதை மூச்சுத் திணறல் என்று சொல்கிறார்கள். கொரோனா காரணமாக மட்டுமின்றி, ஆஸ்துமா, நுரையீரல் நோய்த் தொற்று, இதய நோய் உள்ளிட்ட வேறு பல காரணங்களாலும் சுவாசத் திணறல் ஏற்படலாம்.

தற்போதைய சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக அளவில் நுரையீரல் தொற்று காரணமாக சுவாசத் திணறல் பிரச்னை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் உடல் முழுக்க இருந்தாலும் அது நுரையீரலில் காற்று அறைகளைப் பாதிப்படையச் செய்கிறது. இதனால் நுரையீரலால் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரிக்கும் வேலை செய்ய முடியாமல் போகிறது. குறிப்பாக கொரேனாவுடன் உடல் பருமன், சர்க்கரை நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

கொரோனா தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் சுவாச பிரச்னை வரும் என்று இல்லை. மைல்ட் எனப்படும் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்குக் கூட சுவாச பாதிப்பு வரலாம். எனவே, அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.

தொடக்க நிலையில் ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத் திணறல் வந்து சரியாகலாம். குறிப்பாக படி ஏறும்போது, படுக்கும் நிலையை மாற்றும்போது, நடக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்படலாம். அப்படி இருந்தால் அது மைல்ட் பாதிப்பு. உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. மூச்சுத் திணறல் அதிகரித்தால் அது உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடலாம். எனவே, கொரோனா தொற்று உறுதியானால் ஆக்சிமீட்டர் வாங்கி ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும். படுக்கையில் இருந்து எழுந்தால், மீண்டும் படுக்கையில் படுத்தால் சில நிமிடங்களுக்கு திணறல் இருக்கும். அதன் பிறகு சரியாகிவிடும். இந்த நிலையிலாவது சிகிச்சைக்கு சென்றுவிடுவது நல்லது.

கடைசியில், தொடர்ந்து இரண்டு, மூன்று வார்த்தைகளைக் கூட பேச முடியாத அளவுக்கு மூச்சு வாங்குகிறது என்றால் தீவிர பாதிப்புக்கு சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம். அந்த நிலைக்கு செல்வதற்கு முன்னதாகவே மருத்துவ உதவியை நாடிவிடுவது நல்லது.  உடனடியாக ஆக்சிஜன் வசதியைப் பெறுவதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம்.