வீட்டில் இருந்து சென்றவர் திடீர் மாயம்… எரிந்து கிடந்த ஓட்டல் ஊழியர்… திருவெறும்பூரில் அதிர்ச்சி

 

வீட்டில் இருந்து சென்றவர் திடீர் மாயம்… எரிந்து கிடந்த ஓட்டல் ஊழியர்… திருவெறும்பூரில் அதிர்ச்சி

வீட்டை விட்டு வெளியே சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது திருவெறும்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவர் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சாப்பிட்டு விட்டு வெளியில் சென்ற ரத்தினசாமி பின்னர் வீடு திரும்பவில்லை. தந்தையை பல இடங்களில் தேடியுள்ளார் மகன் ரவிக்குமார். இதனிடையே, திருவெறும்பூர் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ரத்தினசாமி எரிந்து கிடப்பதாக மகனுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார் ரவிக்குமார். எரிந்து கிடந்தது தந்தை என உறுதி செய்துள்ளார் அவர். இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரத்தினசாமி உடல் கிடந்த இடத்தில் வாட்டர் கேனில் பெட்ரோலும், கேரி பையில் தீப்பெட்டியும் இருந்துள்ளது. ஆனால், திருவெறும்பூர் காவல்துறையினர், ரத்தினசாமி இறந்து கிடப்பது எங்கள் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்டது இல்லை என்றும் நவல்பட்டு காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்டது என்றும் கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.அதன்பிறகு, நாவல்பட்டு காவல்துறையினருக்கு திருவெறும்பூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு காவல்துறையினர் ரத்தினசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரத்தினசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.