கருவளையம் போக இந்த வீட்டு வைத்தியம் உதவும்!

 

கருவளையம் போக இந்த வீட்டு வைத்தியம் உதவும்!

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப்பெரிய அழகு சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுகிறது. மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக, அசௌகரியமாக இந்த கருவளையம் இருக்கிறது. கண்களைச் சுற்றியுள்ள சருமப் பகுதி மிகவும் சென்சிடிவானது. அந்த பகுதியில் தடவும் மருந்து கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். எனவே, இயற்கையான முறையில் கருவளையத்தைப் போக்க முயற்சிப்பது நல்லது.

கருவளையம் போக இந்த வீட்டு வைத்தியம் உதவும்!

பொதுவாக சரியான தூக்கமின்மையால் அவதியுறுபவர்களுக்கு கருவளையம் பிரச்னை அதிகம் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வயோதிகம் காரணமாக கருவளையம் வருவது முக்கிய காரணியாக உள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போனை உற்று பார்ப்பது, கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது போன்றவற்றாலும் சில வகையான ஒவ்வாமை பிரச்னை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது.

சரியான தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருகிறது என்றால் முதலில் தூக்கத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்க வேண்டும். காரணத்தை அறிந்து அதை சரி செய்து அதனுடன் வீட்டு வைத்தியத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருவளையம் போக இன்ஸ்டட் டீ பேக் வாங்கிக்கொள்ள வேண்டும். அதை நீரில் நன்கு அலசி ரெஃப்ரிஜிரேட்டரில் 10-15 நிமிடங்கள் வைத்து கண்களில் ஒற்றி எடுக்க வேண்டும். சாதாரண டீ பேக் மட்டுமின்றி க்ரீன் டீ பேக்கை பயன்படுத்தினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்ட வடிவில் வெட்டி கண்கள் மீது வைத்து 10 – 12 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவற்றின் சாற்றை கூட தடவி ஊறவிட்டு கழுவலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கண்ணைச் சுற்றி ஏற்பட்ட வீக்கத்தைப் போக்கி, கருவளையத்தை மறையச் செய்யும்.

பசும் பால் மிகச்சிறந்த கிளென்சராக செயல்படும். பாலை ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்து குளிர்ச்சியானதும் அதை பருத்தி பஞ்சில் தொட்டு கண்கள் மீது ஒற்றி எடுக்க வேண்டும். பிறகு கண்களை கழுவ வேண்டும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழையை பயன்படுத்துவது கருவளையத்தைப் போக்க உதவும். கற்றாழை ஜெல்லை எடுத்து கண்களைச் சுற்றி கருவளையத்தின் மீது தடவி 7-10 நிமிடம் ஊற விட வேண்டும். கற்றாழை ஜெல் பிசுபிசுவென இல்லை என்றால் கழுவ வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம். அசௌகரியமாக இருந்தால் தண்ணீர்விட்டு மென்மையாக கழுவலாம்.

பாதாம் எண்ணெய்யில் துளி எலுமிச்சை சாறு விட்டு கருவளையத்தின் மீது தடவலாம். கருவளையத்தின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து 2-3 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.