மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

 

மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

மலச்சிக்கல்… எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்னை… ஆனால் அதைப் பற்றிப் பேச தயக்கம் மட்டும் அதிகம். 20 சதவிகிதம் மக்கள் மலச்சிக்கல் பிரச்னை காரணமாக மருத்துவர்களை நாடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து நம்முடைய வாழ்க்கை முறை வரை பல்வேறு விஷயங்கள் மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கின்றன.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிப்பது இயல்பு நிலை என்று கருதப்படுகிறது. ஆனால் சிலருக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும் உணர்வு வருவது. மலம் கழிக்கும் போது அதீத வலி ஏற்படுவது. மிகவும் உலர்ந்த, கடினமான, கட்டை போன்று மலம் வெளியேறுவது, முழுமையாக மலம் கழித்த உணர்வு இன்றி இருப்பது போன்றவை ஒருவர் மலச்சிக்கல் பிரச்னையுடன் உள்ளார் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

மலச்சிக்கல் தவிர்க்க வீட்டிலேயே எளியத் தீர்வுகள் உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

தண்ணீர் அருந்த வேண்டும்:

மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வு ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துவதுதான். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் குளிர்பானங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்:

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் நார்ச்சத்து மிக்க உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவுகள் உணவு செரிமானத்தின் போது சிறுகுடல், பெருங்குடல் போன்ற வயிறு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நீரில் கரையும் நார்ச்சத்து உள்ள உணவை எடுப்பது நல்லது.

மலச்சிக்கல் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

உடற்பயிற்சி:

தினசரி 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சி வயிறு செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் அமர்ந்தபடியே, உடல் உழைப்பின்றி வேலை செய்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடினமான உடற்பயிற்சிகளில் இறங்காமல் நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் போன்றவற்றை செய்யலாம்.

காபி அருந்தலாம்:

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாக காபி அருந்துவதன் மூலம் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். காபியில் உள்ள ரசாயனம் செரிமான தசைகளைத் தூண்டி மலம் கழிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

ப்ரோபயாடிக் உணவுகளை எடுக்க வேண்டும்:

உணவில் நல்ல பாக்டீரியா உள்ள உணவுகளை எடுப்பது மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்க உதவும். தயிர், யோகர்ட் போன்றவற்றில் நல்ல பாக்டீரியா அதிகமாக உள்ளது. நம்முடைய வயிற்றில் நல்ல பாக்டீரியா காலணி உள்ளது. அது பாதிக்கப்படும்போது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ப்ரோபயாடிக் உணவுகளை எடுப்பது மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு தரும்.

இது தவிர தினசரி சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, கண்ட கண்ட நேரத்தில் கண்ட கண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக அளவில் சீஸ் உள்ளிட்ட ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்வது, மன அழுத்தம் ஆகியவையும் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றன. இந்த வாழ்க்கை முறை பிரச்னைகளை சரி செய்தால் மலச்சிக்கல் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.