மக்களின் உணர்வைக் கருதி விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் அளிக்க முடியுமா? நீதிமன்றம் கேள்வி
கொரோனா பாதிப்பின் காரணமாக வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலம் எடுத்துச் செல்ல தடை விதித்தும் அரசு உத்தரவிட்டது. மக்களின் நலன் கருதியே இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ள நிலையில், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், டாஸ்மாக்குக்கு அனுமதி வழங்கிய அரசு இதற்கு ஏன் வழங்கவில்லை என்றும் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் பொது இடங்களில் சிலைக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதிபதிகள், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகளை அளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கொரோனா சூழலில் பெரிய ஊர்வலங்களுக்கு அனுமதிக்க முடியாது என்பதில் மாற்று கருத்தில்லை என்றாலும் வழிபாடு முடிந்தவுடன் சிலைகளை கோவில்களில் வைக்க அனுமதி வழங்கலாமா அல்லது பைக்கில் எடுத்துச் சென்று கடலில் கரைக்க அனுமதி தரலாமா? என கருத்து தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு நாளை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.