உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதிக்கலாமா? பதில் தர நீதிமன்றம் உத்தரவு

 

உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதிக்கலாமா? பதில் தர நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதிக்கலாமா? பதில் தர நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் நளினியை பேசவும், பார்க்கவும் அனுமதிக்கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி செய்தார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் ஒருவர் தலையிட்டதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முருகனின் தாய், சகோதரியுடன் முருகனும் நளினியும் பேச அனுமதி அளிக்குமாறு முருகனின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினியும் முருகனும் ஒரு நாள் பேச அனுமதிப்பது குறித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.