நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

 

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

குழந்தைகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களைப் பார்த்து பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யப் பழகுகின்றனர். கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்கள் நடத்தை கட்டமைக்கப்படுகிறது. நாம் நல்லவற்றையே செய்து வந்தால் அதைப் பார்த்து குழந்தைகளும் நல்லதையே செய்வார்கள்.

எனவே, குழந்தை உள்ள வீட்டில் பெற்றோர் முன்மாதிரியாக வாழ வேண்டும். நாம் எதை சாப்பிடுகிறோமோ, செய்கிறோமோ அதையேதான் நம்முடைய குழந்தைகளும் செய்வார்கள். எனவே,

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள்: சரியான நேரத்துக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். சாப்பிடும்போது உங்கள் முன்பாக குழந்தைகளையும் சாப்பிட வையுங்கள். குழந்தை சாப்பிடவில்லை என்பதற்காக அதற்கு ஊட்டிவிடும் பழக்கத்தைத் தொடர வேண்டாம். அவர்களாக எடுத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்.

உடற்பயிற்சி: தோட்ட பராமரிப்பு, வீட்டை சுத்தம் செய்வது, உடற்பயிற்சி என்று உடல் உழைப்பு வெளிப்படும் விஷயங்களை செய்யுங்கள். அவர்கள் வாக்கிங், ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங் என உடற்பயிற்சி செய்ய ஊக்குவியுங்கள். பூங்கா அருகில் இருந்தால் அங்கே அழைத்து செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வது நல்லது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஏற்படும்.

சரியான நேரத்துக்கு தூங்குங்கள்: குழந்தை மட்டுமே சீக்கிரம் தூங்க வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்குச் சென்றுவிடுங்கள். குழந்தைகளுடன் தூங்கும்போது அவர்களும் விரைவாக தூங்க ஆரம்பிப்பார்கள்.

கைகளைக் கழுவக் கற்றுக்கொடுங்கள்: சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு, செல்லப்பிராணிகளைத் தொட்டால் உடனடியாக கைகழுவும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஏனாதானோ என்று கழுவாமல் நன்கு சோப் போட்டு கழுவும் முறையை நீங்கள் செய்யுங்கள், அதைப் பார்த்து குழந்தைகளும் செய்வார்கள்.

புத்தகம் படித்தல்: டிஜிட்டல்மயம் ஆனாலும் புத்தகம் படிப்பதுதான் மூளை செயல்திறனுக்கு நல்லது. ஒளிர் திரையைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் கண் நரம்புகள் பாதிக்கப்படும். எனவே, தினமும் புத்தகம் வாசித்தலை ஒரு நிகழ்வாக மாற்றுங்கள். குழந்தைகளும் புத்தகம் படிக்க ஆரம்பிப்பார்கள். இல்லை என்றால் வழக்கம் போல வீடியோ கேம்ஸ் போன்றவற்றுக்கு சென்றுவிடுவார்கள்.

பொது இடங்களில் சுகாதாரம்: பொது இடங்களில் தும்முவதன் மூலம் மூக்கை மூட வேண்டும் என்று அடிப்படை நாகரீகத்தை கற்றுக்கொடுங்கள். கையில் எப்போதும் கைக்குட்டை இருக்க வேண்டும், தும்மல் வந்தால் கைக்குட்டையால் முகத்தை மூட வேண்டும், கைக்குட்டை இல்லை என்றால் முழங்கையால் முகத்தை மூடி மூக்கிலிருந்து தும்மல் நீர் திவலைகள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

அதே போல் பொது இடங்களில் கொட்டாவி விடுவது, மூக்கு நோண்டுவது போன்றவற்றை செய்யக் கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.