கடலூரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு… ஜிப்மரில் தீவிர சிகிச்சை…

 

கடலூரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு… ஜிப்மரில் தீவிர சிகிச்சை…

கடலூர்

கடலூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடி விட்டு, கரும்பு தோட்டத்தின் வழியாக வந்துள்ளனர். அப்போது, கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதை கண்ட மாணவர்கள், ஊறலில் இருந்த சாராயத்தை குடித்து உள்ளனர்.

கடலூரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு… ஜிப்மரில் தீவிர சிகிச்சை…

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மூவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மூவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாராயம் குடித்து 3 சிறுவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.