மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எச்.டி. தேவகவுடா நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதமரும், மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா கடந்த ஜூன் மாதம் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூலை 22ம் தேதியன்று நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பில் தேவகவுடாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தேவகவுடா கன்னட மொழியில் பதவிப் பிரமாணம் செய்தார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தேவகவுடா, 1994 முதல் 1996ம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக இருந்தவர். 1996ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டின் 11வது பிரதமராக இருந்தார். கடந்த 14,15 மற்றும் 16வது நாடாளுமன்ற தேர்தல்களில் கர்நாடகாவின் ஹாசன் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவ கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.