அரசு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள உத்தரவு!
ராமாபுரம் பகுதியிலிருந்த சாலையைக் கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா?, எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்காததால், அரசு நிலத்தைக் கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றை இடித்துத்தள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், குறிப்பிட்ட அந்தப் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோவில் நிர்வாகப் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதேபோல, ஆவடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அரசு அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர். அரசு நிலம், நீர் வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துத்தள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.