ஸ்டெர்லைட்டில் அமோனியம் நைட்ரேட்டை போன்ற அபாயமான ரசாயனங்கள்! – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்கள்
லெபனானில் மிகப்பெரிய வெடி விபத்தை ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட் போன்ற பயங்கரமான ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாகவும், எனவே, அந்த ஆலையை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை இரண்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பட தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த ஆலை ஏற்படுத்தும் மாசு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் அங்கு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக அந்த ஆலை செயல்படாத நிலையில், அந்த பயங்கரமான ரசாயனங்கள் எல்லாம் அப்படியேதான் உள்ளன. அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள பதிவில்,
பெய்ரூட்டில் வெடித்த “அம்மோனியம் நைட்ரேட்” போன்ற அபாயகரமான ரசாயன வேதியல் கழிவுகள், கலவைகள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ளன. அவை கடந்த இரண்டு வருடங்களாக அப்படியே உள்ளன, அருகாமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதனால் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி
— G. Sundarrajan (@SundarrajanG) August 19, 2020
“பெய்ரூட்டில் வெடித்த “அமோனியம் நைட்ரேட்” போன்ற அபாயகரமான ரசாயன வேதியல் கழிவுகள், கலவைகள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ளன. அவை கடந்த இரண்டு வருடங்களாக அப்படியே உள்ளன, அருகாமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதனால் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி உடனடியாக அந்த ஆலையை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அபாயகரமான வேதியல் பொருட்களைக் கையாள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமம் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை பலரும் எழுப்பி வருகின்றனர். அரசு உடனடியாக செயல்பட்டு ரசாயனங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் தூத்துக்குடி மக்கள் அன்பை சம்பாதிக்க முடியும்.