’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

 

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

திமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அதிலிருந்து முரண்பட்டு அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தை அண்ணா பின்பற்றினாலும் தேர்தலில் போட்டியிட்டு மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டியிருப்பதால் கடவுள் மறுப்புக் கொள்கையில் சற்று சமரசம் செய்துகொண்டு ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற முடிவை எடுத்தார்.

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

அதன் பின் திமுகவின் தலைவரான மு கருணாநிதி அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த தன் கருத்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக அவர் முன்வைத்துள்ளார். அதற்காக பலமுறை அவர் மீது கடும் விமர்சனங்கள் இந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ராமர் பாலம் குறித்த ஒரு கேள்வி ஒன்றுக்கு ’ராமர் பாலம் கட்ட அவர் என்ன இஞ்சினியரா?’ என்று கலைஞர் கருணாநிதி கேட்டிருந்தார். அதற்கு இந்துத்துவ சாமியார் ஒருவர் கருணாநிதியின் தலையை விலையாக கேட்ட செய்தி எல்லாம் நாம் படித்திருப்போம்.

அப்படி உறுதியாக இருந்த திமுகவில் இப்போது சில மாற்றஙள். திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின், அண்ணா கருணாநிதி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லி வருகிறார்.

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

ஆனால் சமீப காலமாக ’திமுகவில் 90% இந்துக்கள் தான் இருக்கிறார்கள்’ ’இந்துகளின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியது திமுக’ என்று ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கெல்லாம் உட்சபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “என் மனைவி செல்லாத கோவிலே இல்லை. திமுகவில் உள்ளவர்கள் நெற்றியில் பட்டை, குங்குமம் இட்டுக்கொள்வதைப் பார்த்திருக்க முடியும். அப்படி இட்டுக்கொள்வது அவர்களின் விருப்பம்” என்று தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி ஒரு நிகழ்ச்சியில் , “கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை திராவிட இயக்கம் செய்தது எல்லாம் இந்துகளுக்காகவே” என்பதாகவே பேசியிருக்கிறார். இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது திமுக ’நாங்களும் இந்துக்கள்தான்’ என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் பாஜகவினர் முன்பைவிட சுறுசுறுப்போடு தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் இந்து மதம் சார்ந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்து கொண்டே இருக்கிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியின் போது அதை முன்பை விட பிரம்மாண்டமாக ஊர்வலம் செல்வதும் கந்தசஷ்டி விவகாரத்தை பெரிய அளவுக்கு மாற்றியதும் அதன்பின் வேல் யாத்திரை எனும் பெயரில் பல ஊர்களுக்கு யாத்திரை சென்றதும் நடந்தன.

இவையெல்லாம் ஒருவகையில் இந்து மத உணர்வுள்ள பலரை ஒருங்கிணைக்கும் வேலையாகவே கருதி அவர்கள் செய்தார்கள். மேலும் திமுக மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை இந்து மதத்தை மட்டும் தான் விமர்சிக்கிறது என்கின்ற வாதத்தை தொடர்ந்து அவர்கள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்கள் மேடைப்பேச்சுகள் உள்ளிட்ட அனைத்திலும் சொல்லிக்கொண்டே வருகிறார்கள்.

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

இந்த நெருக்கடி எல்லாம் சேர்ந்துதான் திமுக இந்த நிலையை எடுக்க காரணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே பாஜக நிலைபாடு. பத்திரிகையாளர் குருமூர்த்தி சொன்னதைப்போல வீடு பற்றி எரியும்போது கங்கை நீருக்காக காத்திராமல் சாக்கடை நீரை ஊற்றி அணையுங்கள் என்றார். அதேபோல திமுகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது உட்பட பல பணிகளை செய்கிறது பாஜக.

அவற்றை எதிர்கொள்ளும் விதமாக திமுக, இந்து வாக்குகள் தனக்கு எதிராக மாறி விடக்கூடாது என்பதற்காக ’நாங்களும் இந்துக்கள்தான்’ என்று இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்களில் திமுக இந்து மக்களுக்கு செய்த விஷயங்களை பட்டியலிடுகிறது. இது எதிர்வினையாக இருந்தாலும் கூட திமுகவின் அடிப்படை கொள்கையிலிருந்து இது விலகும் படியான தோற்றத்தை மற்றவருக்கு தருகிறது என்றே சொல்லலாம். மேலும் திமுகவின் இந்தப் பிரசாரம் வாக்குகளாக திரும்ப கிடைக்குமா என்பதை தேர்தல் முடிவு வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.