குருப்பெயர்ச்சி பலன் – மேஷ ராசி

 

குருப்பெயர்ச்சி பலன் – மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் கடந்த ஒரு ஆண்டாக பிரமாதமாக நல்ல விஷயங்களை சந்தித்திருப்பார்கள். ஜாதகம் நன்றாக இருந்த மேஷ ராசிகாரர்கள் கடந்த ஆண்டில், போதும் போதும் என்கிற அளவுக்கு நல்ல விஷயங்களை சந்தித்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பெயர்ச்சி 10 ஆம் இடத்துக்குச் செல்கிறது. ஜோதிடத்தில் சொல்லப்படாத பல சங்கதிகள் உண்டு. அதாவது, பரமகுரு பத்தில் வர, பதவி பறிபோகும் என ஒரு வழக்கு உண்டு. அதனால் 10 வது இடத்தில் போவதால் வேலை போய்விடுமா என்கிற பயம் எல்லாம் தேவையில்லை. குருபகவானின் சிறப்பு என்னவென்றால், அவர் இருக்கின்ற இடத்தை விட , பார்க்கின்ற இடத்துக்கு பலன் அதிகம். தாயைப்போல கவனித்துக் கொள்வதில் குருபகவானுக்கு நிகர் அவரே. அதனால் மேஷராசிக்காரர்கள் பயப்படத் தேவையில்லை.
2 ஆம் இடத்தை குரு பார்க்கிறார்.தொழில் விருத்தியாகும், இதுவரை நிறைவேறாத காரியங்கள் கச்சிதமாக நிறைவேறும், அதேபோல குரு 9 ஆம் இடத்தை பார்க்கிறார். அதனால் அவர்களுக்கு என தனி அடையாளங்கள் உருவாகும். வீடு வாங்கும் யோகம் வரும், தொழில் சிறந்து வரும். இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை சிறந்து விளங்கும். அனைத்து விஷயங்களிலும் புகழ் மரியாதை உண்டாகும். பாக்கிய ஸ்தானமாக விளங்குவார்.

குருப்பெயர்ச்சி பலன் – மேஷ ராசி

அதேபோல மகரத்தில் இருக்கும்போது, தனியாக இருந்தால் குருபகவானுக்கு பலம் இல்லை. நல்லவர்கள் தனியாக இருந்தால் தர்ம சாஸ்திரத்தை கடைபிடித்து தனியாக இருப்பார்கள். எதுவும் செய்ய மாட்டார்கள் அதுபோல, அதாவது அவருடன் யாராவது சேரும்போதுதான், அவரிடமிருந்து எதாவது எடுத்துக் கொள்ள முடியும் அல்லது அவரும் ஊக்குவிக்க முடியும். அந்த வகையில்தான் தற்போதைய குருபெயர்ச்சியும். ஏற்கெனவே சனி பகவான் மகரத்துக்குள் இருக்கிறார். அவருடன் குரு சேரப்போகிறார். அதாவது சனியும் குருவும் இணைந்து பலன் அளிக்கப்போவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் பாவாதிபதிகளாக இருப்பவர்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில் அமர உள்ளனர்.

குருப்பெயர்ச்சி பலன் – மேஷ ராசி

ஜாதகப்படி பார்த்தால், 9 மற்றும் 10 வது இடத்தை எடுத்துக் கொண்டால், தர்ம கர்ம ராஜயோகம் என பெயர். அதுமட்டுமல்ல, குரு பகவான் நீட்சம் பெறுகிற அமைப்பும் மகரத்தில் உள்ளது. அவர் நீட்சம் பெற்றாலும், நீட்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். அந்த வகையில் மேஷத்தில் பிறந்த எல்லோருக்கும் இந்த குருபெயர்ச்சி என்பது எல்லா விதத்திலும் நன்மைகளை கொண்டு வரும். வேலைதேடிச்செல்லும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் வரும். கிடைத்த வேலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பொருளாதாரம் வளரும். குடும்ப வாழ்க்கையில் அனைத்து சிக்கல்களும் தீரும். இனம், மதம், மொழி கடந்த அத்தனை மக்களும் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். சபையையும், சமூகத்தையும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி ஆகச் சிறப்பாக அமையும் என்பதே எதிர்பார்ப்பு.

குருப்பெயர்ச்சி பலன் – மேஷ ராசி

குருப்பெயர்ச்சியை பொறுத்தவரை வருடாந்திர பெயர்ச்சி நன்றாக இருக்கும். எனிலும் மனசஞ்சலம் உள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு போகும் வழியில் கழுகுமலை என்கிற ஊரில் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் செவ்வாய் கிழமை சென்று, முருகனுக்கு பலாபிஷேகம் செய்யலாம். அங்கு அமர்ந்து வழிபட்டால் குருபெயர்ச்சி நினைத்த காரியங்களை நிறைவேற்றும்!